நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான தமிழ் திரையுலகின் ஐகானிக் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘பில்லா’, அவரது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த மறுவெளியீட்டை எம்.டி. பி. ஆண்டனி தாஸ் வழங்குகிறார். மாநிலம் முழுவதும் பட வெளியீட்டை சசிகலா புரொடக்ஷன் மேற்பார்வை செய்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த படம் 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்புடனும் புதிய போஸ்டர் வடிவமைப்புகளுடன் வெளியாகிறது.
2007ஆம் ஆண்டு வெளியான ’பில்லா’ திரைப்படம் அப்போதே மிகப்பெரிய வெற்றி பெற்று, நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. அஜித் குமாரின் ஸ்டைல் மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸை மறுவரையறை செய்த இந்த படம், அவரை மிகவும் ஸ்டைலிஷான புதிய தோற்றத்தில் ரசிக்க வைத்தது. இன்றும் அதன் தாக்கம் பாப் கலாச்சாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் இருப்பதை மறுக்க முடியாது. விஷ்ணு வர்தன் இயக்கிய இந்தப் படத்தின் கதை சொல்லல், சர்வதேச தரத்திலான காட்சிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தரத்தால் இந்தப் படம் இன்றும் பேசப்படுகிறது. படத்தில் கதாநாயாகியாக நடித்த நயன்தாராவின் வலுவான கதாபாத்திரமும் அவரது ஈர்க்கும் திரையிருப்பும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது.
படத்தின் மற்றுமொரு பலம் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும். குறிப்பாக, இன்றும் பலரின் காலர் டியூனாக இருக்கும் படத்தின் தீம் மியூசிக், தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பின்னணி இசைகளில் ஒன்று. ஸ்டைல், கதை சொல்லல், திறமையான நடிகர்கள் என ஆக்ஷன் திரில்லர் ஜானரை ‘பில்லா’ திரைப்படம் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு மறுவரையறை செய்தது. ’பில்லா’ திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் மீண்டும் பார்த்து கொண்டாட இது ஒரு வாய்ப்பாக அமைவதோடு, புதிய தலைமுறைக்கும் இந்த படத்தை அறிமுகப்படுத்துகிறது.
’பில்லா’ திரைப்படத்தின் மறுவெளியீடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் மே 1 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி ரசிகர்களைக் கவர இருக்கிறது.
தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான பி. ஆண்டனி தாஸ் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியா ஆளுமையாக உருவெடுத்து வருகிறார். சசிகலா புரொடக்ஷனின் நிறுவனரான இவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், புதிய இயக்குநர்கள் மற்றும் தனித்துவமான சினிமா முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டமிடல், முதலீடு மற்றும் வெளியீட்டு திட்டங்களில் முக்கிய பங்காற்றுகிறார்.
சசிகலா புரொடக்ஷனின் தலைமை நிர்வாக அதிகாரி சலீம் ஜி. சிவா, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட திறமையான திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சன் நெட்வொர்க்கில் அவர் செய்த விரிவான பணியின் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார். காட்சிப் பதிவு, லைட்டிங் டிசைன் மற்றும் உயர் தரமான தயாரிப்பு முறைகளில் நிபுணத்துவம் பெற்ற அவர், நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார்.




